Friday, June 6, 2008

செல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்ன ஆகும்? (பஜகோவிந்தம் 11)


மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

மா குரு தன ஜன யௌவன கர்வம் - செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.

ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் - காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.

மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா - இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு

ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா - இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 24 ஜனவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

16 comments:

இராமநாதன் said...
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந்
நிலைநின்று நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!

--எக்காரணத்தாலோ இந்தத் திருவருட்பா தான் நினைவுக்கு வருகிறது... இதைப் பற்றித் தனிப்பதிவு போடவேண்டுமென்றிருந்தேன். இப்போதைய தமிழ் ஜோக் முடிந்தவுடன் போடுகிறேன். நன்றி

January 24, 2006 5:50 PM
குமரன் (Kumaran) said...
இராமநாதன், அருமையான திருவருட்பா பாடல். என் அடுத்தப் பதிவில் இந்த திருவருட்பாவின் முதல் செய்யுளைத் தான் இடப் போகிறேன். அங்கும் வந்து இந்த திருவருட்பாவைப் பாடிப் பொருள் சொல்லலாம். பொருள் சொல்ல முடியாது என்றால் இராகவனிடம் சொல்லுங்கள். மயிலாருடைய துணையுடன் அருமையாகப் பொருள் சொல்லுவார். :-)

January 24, 2006 6:41 PM
Merkondar said...
நன்றாக உள்ளது

January 24, 2006 7:18 PM
குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.

January 24, 2006 7:30 PM
Anonymous said...
செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர் - unmai.

Kumaresh

January 25, 2006 9:50 AM
குமரன் (Kumaran) said...
கருத்துக்கு நன்றி குமரேஷ்.

January 25, 2006 11:26 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும்.
உண்மைதான் குமரன் எனக்கு எப்போதோ படித்த ஒரு தமிழ்ப் பாடல் ஞபகம் வருது
கைப்பொருள் உள்ளானை கல்லானே ஆனலும் எல்லரும் எள்ளுவர்,
கைப்பொருள் இல்லானை இல்லாலும் வேண்டாள், மற்றும் ஈன்ற எடுத்த தாய் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொல். மறுபடியும் வேலை வாங்க வந்து விட்டேன்.தி.ரா.ச

January 25, 2006 11:34 AM
குமரன் (Kumaran) said...
நல்ல பாடலைக் கொடுத்துள்ளீர்கள் தி.ரா.ச. வேலைக் கொடுப்பதற்கு மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி :-)

January 25, 2006 10:45 PM
இராமநாதன் said...
குமரன்,

சொன்னா மாதிரியே, வலையேற்றியுள்ளேன். கேட்டுப்பாருங்கள்

January 27, 2006 1:19 PM
குமரன் (Kumaran) said...
பார்த்தேன் இராமநாதன். பின்னூட்டமும் இட்டுவிட்டேன். நீங்க வந்து அதனை அனுமதித்தால் வலைபதிவில் வரும்.

January 27, 2006 9:30 PM
Karthik Shankar said...
மிக உன்னத கருத்துக்கள். உங்கள் மொழி பெயர்ப்பு அருமை.

என்றும் அன்புடன்

March 09, 2006 7:07 AM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி கார்த்திக். நேரம் கிடைக்கும் போது எனது மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

March 09, 2006 11:47 AM
Sam said...
அன்புள்ள குமரன்
நல்ல பதிவு. மனத்துக்குப் பிடித்த பாட்டு. நன்றாக உரை எழுதுகிறீர்கள்.
அன்புடன்
சாம்

March 09, 2006 1:57 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சாம் அண்ணா.

March 09, 2006 2:00 PM
பொன்ஸ்~~Poorna said...
ஹித்வா என்றால், நல்லது என்று அர்த்தம் இல்லையா? விளக்கத்தில் ஒரு நல்லதும் வரவில்லையே.. ஹித்வா என்றால் தனியாக என்ன பொருள்?

April 26, 2006 10:50 PM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ். ஹிதம் என்றால் நன்மை. ஹித்வா என்றால் அழியக்கூடியது என்று பொருள்.

April 26, 2006 10:52 PM

Kavinaya said...

//மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா//

எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள முயல்கிறேன்!

குமரன் (Kumaran) said...

முயல்வதே நம்மால் முடிவது. அவனருளால் அன்றோ அவன் தாள் வணங்குவது.