Monday, September 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 3

ஆதித்ய ஹ்ருதயத்தின் முதல் பத்து சுலோகங்களை சென்ற இடுகைகளில் பார்த்தோம். இந்த இடுகையில் அடுத்த ஐந்து சுலோகங்களைப் பார்க்கலாம்.

ஹரித் அஸ்வ: சஹஸ்ரார்ச்சி: சப்த சப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஸ்டா மார்தாண்ட அம்சுமான்

harisdasva: sahasraarchi: sapta saptir mariichimaan
timironmadhana: sambu: tvaStaa maarthaanda amsumaan

ஹரித் அஸ்வ: - பச்சைக்குதிரையை உடையவன். உலகெங்கும் பசுமை நிறம் செழிக்க சூரியனின் கதிர்கள் தேவை. அந்த பச்சைப்பயிர்களை வளர்ப்பவன் ஆதலால் அவன் பச்சைக்குதிரையை உடையவன் ஆகிறான்.

சஹஸ்ரார்ச்சி: - ஆயிரக்கணக்கான கதிர்களை உடையவன். தன்னுடைய ஆயிரக்கணக்கான கதிர்களால் இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்.

சப்த சப்தி: - ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். இவனின் கதிர்கள் எல்லா வகையான நிறங்களும் உடையவை. அனைத்து நிறங்களும் சேர்ந்த இவன் கதிரே இவன் தேர். ஆனாலும் அந்த எல்லா நிறங்களிலும் ஏழு நிறங்கள் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த நிறங்களை வானவில்லில் காணலாம். அந்த ஏழு நிறங்களும் இங்கே ஏழு குதிரைகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒரு வாரம் என்பதை ஒரு தேர் என்று கொண்டால் அந்த வாரத்தின் நாட்களைக் குதிரைகளாகக் கொள்ளலாம். அப்படி ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தை ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேராக உடையவன் கதிரவன்.

மரீசிமான் - தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.

திமிரோன் மதன: - இருட்டையும் அறியாமையையும் அழிப்பவன். இவனது கதிர்கள் இருக்கும் இடத்தில் இருட்டு இருப்பதில்லை. இருட்டில் இருக்கும் வரை தன்னுடைய உடலே தெரியாமல் இருக்கின்றது; இவனது கதிர்கள் வந்தவுடன் அனைத்து இயக்கங்களும் நடைபெற்று உலக அறிவு, ஆன்மிக அறிவு என்ற எல்லா அறிவும் கிட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் இவன் அறியாமை இருளையும் நீக்குபவன் ஆகிறான்.

சம்பு: - மகிழ்ச்சியைத் தருபவன். அறியாமை என்னும் இருளை நீக்குவதால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. அந்த அறிவால் நன்மையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.

த்வஸ்டா - அனைத்தையும் குறைப்பவன். எந்தப் பொருளும் இவனது கதிர்களில் நீண்ட நாட்கள் இருந்தால் தன்னுடைய உருவத்திலிருந்து சுருக்கமடைகின்றது. குறிப்பாக நீர். அனைத்தையும் குறைப்பதால் உலக சுழற்சிக்கு வழி வகுக்கிறார் சூரியன். நீரைக் குறைப்பதால் மேகங்களை உருவாக்குகிறான்; மழையாகப் பொழிய வைக்கிறான். அதே போல் இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.

மார்தாண்ட - மிகுந்த வலிமை உடையவன். இவனிடமிருந்தே உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் வலிமையைப் பெறுகின்றன. அனைத்துப் பொருட்களுக்கும் வலிமையைத் தரும் இவன் எல்லாவற்றையும் விட வலிமை மிகுந்தவன்.

அம்சுமான் - எங்கும் பரவும் கதிர்களை உடையவன். மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும் தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேர்புத்ர: சங்க: சிசிரநாசன:

hiranyakarba: sisira: tapanO bhaaskarO ravi:
agnikarbO athithEr putra: sankha: sisira naasana:


ஹிரண்யகர்ப்ப: - பொன்மயமான கருப்பையை உடையவன். உலகங்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதால் இவன் பொன்மயமான கருப்பையை உடையவன் எனப்படுகிறான். உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.

சிசிர: - குளிரைத் தருபவன். இவனுடைய கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை. அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.

தபனோ - நடுக்கத்தைத் தருபவன். இவன் தரும் குளிரால் உடல் நடுக்கம் தருபவன். இவனுடைய பெருமையைக் கண்டு உடலும் மனமும் நடுங்கச் செய்பவன்.

பாஸ்கர: - எல்லாவற்றையும் ஒளிவீசச் செய்பவன். இவனுடைய ஒளி பெற்று எல்லா உலகங்களும் அவற்றில் இருக்கும் பொருட்களும் ஒளி வீசுகின்றன. சந்திரனும் இவனுடைய ஒளியால் தான் ஒளிர்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.

ரவி: - எல்லாவற்றையும் உருவாக்குபவன். உலகத்தில் எந்தப் பொருள் உருவாக வேண்டுமென்றாலும் இவனது கதிர்களும் அதிலிருந்து கிடைத்த சக்தியும் தேவை.

அக்னிகர்ப்ப: - தீயை தன்னுடலாகக் கொண்டவன். அத்தீயிலிருந்தே உயிர்களைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் செய்யும் கதிர்களை உண்டாக்கி எல்லாத் திசைகளிலும் வீசுபவன்.

அதிதேர் புத்ர: - அதிதியின் மகன். தேவமாதாவான அதிதியின் முதன்மையான மக்களில் ஒருவன்.

சங்க: - ஆனந்தமயமானவன். இவனது கதிர்களால் உலகங்களுக்கெல்லாம் ஆனந்தத்தைத் தருபவன்.

சிசிரநாசன - குளிரை அழிப்பவன். இவனது கதிர்களின் குறைவினால் ஏற்பட்டக் குளிரை இவனது கதிர்களில் பெருக்கத்தால் நீக்குபவன்.

வ்யோமநாத: தமோபேதி ருக் யஜுஸ் சாம பாரக:
கன வ்ருஷ்டி: அபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:

vyOmanaatha: thamObhEdi rug yajuS saama paaraga:
ghanavrushti: apaam mithrO vindhyaviithi plavangama:

வ்யோமநாத: - வானத்தின் தலைவன். வானவீதியில் சூரிய குடும்பத்தின் தலைவன் இவனே. வானத்தில் கண்களுக்கு நேரடியாகத் தெரியும் பொருட்களில் மிகப்பெரியவன் இவனே.

தமோ பேதி - இருளை உடைப்பவன். சூரியனின் கதிர்கள் தோன்றும் வரை இருள் கனத்த இரும்புத் திரையைப் போல் சூழ்ந்திருக்கிறது. இவனது கதிர்கள் வந்தவுடனேயே பெரிய சம்மட்டியால் உடைக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறியதைப் போல் இருள் காணாமல் போகின்றது.

ருக் யஜுஸ் சாம பாரக: - ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன். வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள். அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர். இங்கே சூரியன் மூவேதங்களையும் கண்டு வெளிப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.

கன விருஷ்டி: - கடும் மழையைப் பெய்விப்பவன். இவனது கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களாலேயே உலகில் மழை பொழிகின்றது. அதனால் இவனே மழையைப் பொழிவிப்பவன் ஆகின்றான்.

அபாம் மித்ர: - நீருக்குத் தோழன். சூரியனும் நீரும் தோழர்கள் என்பதாலேயே இவனது கதிர்கள் பட்டவுடன் நீர் தன் உரு மாறி இவனுடன் கலந்து கொள்ளச் செல்கிறது போலும்.

விந்த்ய வீதி ப்லவங்கம: - விந்திய மலையை ஒட்டிய வீதியில் விரைவாகச் செல்பவன். சூரியனை பூமி சுற்றும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானத்தில் அவன் வருடத்தில் ஆறு மாதம் வட பக்கத்திலும் ஆறு மாதம் தென் பக்கத்திலும் செல்வதாகத் தோன்றும். அதனையே உத்தராயணம் என்றும் தட்சினாயணம் என்றும் கூறுவார்கள். அந்த வடக்கு வீதியும் தெற்கு வீதியும் விந்திய மலைத்தொடரை ஒட்டி இருப்பதாகக் கூறுவதும் மரபு. அந்த வகையில் சூரியன் விந்திய மலை வீதியில் விரைவாகச் செல்பவனாகச் சொல்லப்படுகிறான்.

ஆதபி மண்டலி ம்ருத்யு: பிங்கல சர்வதாபன:
கவிர் விஷ்வோ மஹா தேஜ ரக்த சர்வ பவோத்பவ:

Athapi mandali mruthyu: pingala sarvathaapana:
kavir vishvO mahaathEja raktha sarva bhavOthbhava:

ஆதபி: - கொளுத்துபவன். இதற்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் அனுபவித்திருப்போம்.

மண்டலி - வட்டவடிவமானவன்.

ம்ருத்யு: - மரணவடிவானவன். உலகத்தில் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் அனைத்து செயல்களையும் நடத்துவிப்பவன் என்பதால் அவன் மரண வடிவாகவும் இருக்கிறான்.

பிங்கல: - மஞ்சள் வண்ணம் கொண்டவன். சூரியனை மரணம் என்று சொன்னவுடன் அவன் மறையும் போது தோன்றும் பொன்வண்ணம் நினைவிற்கு வருகின்றது போலும்.

சர்வ தாபன: - அனைத்தையும் தகிப்பவன்.

கவி: - அனைத்தையும் அறிந்தவன்.

விஷ்வோ - அண்ட வடிவானவன்.

மஹாதேஜ: - மிகப்பெரும் ஒளிவடிவானவன்.

ரக்த: - சிவந்த வண்ணம் கொண்டவன். பெரும் ஒளிவடிவானவன் என்றவுடன் காலையில் சூரியன் தோன்றும் போது தோன்றும் செவ்வண்ணம் நினைவிற்கு வருகிறது போலும்.

சர்வ பவோத்பவ: - எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே

nakshatra graha thaaraanaam adhibO vishva bhaavana:
tEjasaam api tEjasvi dvaadasaathman namOSthutE

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிப: - விண்மீன்கள், கிரகங்கள் போன்ற வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் தலைவன்.

விஷ்வ பாவன: - அண்டத்தின் பிறப்பிடம்

தேஜசாம் அபி தேஜஸ்வி - ஒளிவீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன்

த்வாதசாத்மன் - பன்னிரு வடிவங்கள் கொண்டவன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வடிவம் கதிரவனுக்கு இருப்பதாகக் கூறுவது மரபு. பன்னிரு ஆதித்யர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்கள் இந்திரன், தாதா, பர்ஜன்யன், த்வஸ்டா, பூஷா, அர்யமா, பகன், விவஸ்வந்தன், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன்.

நமோஸ்துதே - உனக்கு எங்களின் வணக்கங்கள்.

Friday, September 12, 2008

கோவிந்தா தாமோதரா மாதவா! கரையேற்றுவாய் எங்களை!


ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?

ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.

ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி


அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.

இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.