Wednesday, June 25, 2008

சண்டை எதற்கு? பின் சமாதானம் எதற்கு? (பஜ கோவிந்தம் 25)


சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹசந்தௌ
பவ சமசித்த: சர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யாதி விஷ்ணுத்வம்

சத்ரௌ - எதிரிகளிடமோ

மித்ரே - நண்பர்களிடமோ

புத்ரே - பிள்ளைகளிடமோ

பந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)

மா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்

பவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு

வாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, June 21, 2008

உன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)


த்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:
சர்வஸ்மிந் அபி பஸ்யாத்மானம்
சர்வத்ரோ ஸ்த்ருஜ பேதஜ்ஞானம்


த்வயி - உன்னிலும்

மயி - என்னிலும்

ச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்

ஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.

பேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்

வ்யர்த்தம் - அது வீண்

குப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே

ஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு

சர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்

பஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்

சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 20, 2008

வாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)


கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத:
இதி பரிபாவய சர்வம் அசாரம்
விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்

கஸ்த்வம் (க த்வம்) - நீ யார்?

கோஹம் (க அஹம்) - நான் யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்?

கா மே ஜனனி - யார் என் தாய்?

கோ மே தாத: - யார் எனது தந்தை?

இதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு

சர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது

விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 19, 2008

பித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)


ரத்யாகர்பட விரசித கந்தா:
புண்யாபுண்ய விவர்ஜித பந்தா:
யோகி யோக நியோஜித சித்தா:
ரமதே பாலோன்மத்தவத் ஏவ

ரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்

புண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்

யோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்

ரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.

Wednesday, June 18, 2008

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே


புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு

புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு

புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்

இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது

க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முராரி - முரனைக் கொன்றவன்.

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்....



சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

Tuesday, June 17, 2008

கீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)


பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ

கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ

சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.

கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.

ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.

யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மகிழ்ச்சி? (பஜ கோவிந்தம் 19)


யோக ரதோ வா போக ரதோ வா
சங்க ரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததி ஏவ

யோக ரதோ வா போக ரதோ வா - ஒருவர் யோகத்திலோ போகத்திலோ எதில் வேண்டுமானாலும் மனமகிழ்ச்சி அடையலாம்

சங்க ரதோ வா சங்க விஹீன: - தனிமையிலோ கூட்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சி அடையலாம்

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் - ஆனால் யாருடைய மனம் இறைவனின் நினைவில் மூழ்கி மகிழ்ந்து இருக்கிறதோ

நந்ததி நந்ததி நந்ததி ஏவ - அவர் மட்டுமே மகிழ்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; உண்மையில் மகிழ்கிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 13, 2008

வீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)


சுர மந்திர தரு மூல நிவாஸ:
சய்யா பூதலம் அஜினம் வாச:
சர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய சுகம் ந கரோதி விராக:

ஒரு உண்மை சன்யாசி எப்படி இருப்பான் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

சுர மந்திர தரு மூல நிவாஸ: - வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்

சய்யா பூதலம் - படுக்கையோ கட்டாந்தரை

அஜினம் வாச: - உடுப்பதோ தோலாடை

சர்வ பரிக்ரஹ போக த்யாக: - எல்லாவிதமான சுகத்தையும் அடையவேண்டும் என்ற ஆசையையும் அனுபவத்தையும் துறந்துவிட்டவர்

கஸ்ய சுகம் ந கரோதி விராக: - அப்படிப்பட்ட ஆசையற்றவனுக்கு சுகம் ஏற்படாமல் எப்படி போகும்? அப்படிப்பட்டவரே மிக உயர்ந்த சுகத்தை அடைவார்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 12, 2008

கங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)


குரு தே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: சர்வ மதேன
முக்திம் ந பஜதி ஜன்ம சதேன:

குரு தே கங்கா சாகர கமனம் - கங்கை கடலுடன் கலக்கும் சங்கமத்திற்குச் சென்று ஒருவன் நீராடலாம்

வ்ரத பரிபாலனம் - பலவிதமான விரதங்களை அனுஷ்டிக்கலாம்

அதவா தானம் - அளவில்லாமல் தானங்களையும் செய்யலாம்

ஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்

முக்திம் ந பஜதி ஜன்ம சதேன: - நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை

சர்வ மதேன - இதுவே எல்லோருடைய கருத்தும் (மதம் என்றால் கருத்து என்று ஒரு பொருள் உண்டு)

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 11, 2008

துறவிகளையும் ஆசைகள் விடுவதில்லை (பஜகோவிந்தம் 16)


அக்ரே வஹ்னி: ப்ர்ஸ்தே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதல வாச:
ததபி ந முஞ்சதி ஆசா பாச:


எல்லாவற்றையும் துறந்த துறவிகள் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்:

அக்ரே வஹ்னி: - முன்னால் குளிருக்கு இதமாக நெருப்பு இருக்கிறது

ப்ர்ஸ்தே பானு: - முதுகுக்குப் பின்னால் மறையும் கதிரவன் இருக்கிறான்

ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு: - இரவு நேரத்தில் குளிரிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு நடுவில் தாடையை வைத்திருக்கிறார்

கரதல பிக்ஷ: - சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கும் பாத்திரமோ கைகள்

தருதல வாச: - மரத்தடியிலேயே வாழ்க்கை

ததபி ந முஞ்சதி ஆசா பாச: - இந்த நிலையிலும் ஆசாபாசங்கள் ஒருவரை விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் போலிச் சாமியார்களைப் பற்றிச் சொல்லவில்லை ஆதிசங்கரர். உண்மையான சந்நியாசிகளின் வாழ்க்கை முறையைக் கூறி அப்படிப்பட்டவர்களையே ஆசாபாசங்கள் விடுவதில்லை என்று சொல்லி பற்றுகளின் பந்தங்களின் வலிமையைச் சொல்கிறார்.

Monday, June 9, 2008

வயதானாலும் ஆசை விடுகிறதா என்ன? (பஜகோவிந்தம் 15)


அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம்

அங்கம் கலிதம்
- உடல் நடுக்கமடைந்து விட்டது

பலிதம் முண்டம் - தலை நரைத்துவிட்டது

தஸன விஹீனம் ஜாதம் துண்டம் - வாயில் உள்ள பற்களோ விழுந்துவிட்டன

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் - வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்

ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம் - ஆனாலும் ஆசையின் கூட்டம் மட்டும் விடவில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

பலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இதனைத் தான் நான் சொல்வது - சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிக்கவேண்டியது தான்; ஆனால் சாமி, கோவில் என்று சின்ன வயதிலேயே போகவில்லை என்றால் வயதான காலத்திலும் அது வராது; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும் என்று தான் தோன்றும்; ஏனெனில் ஆசைகளின் கூட்டங்கள் அத்தகையவை; அவற்றின் வேகமும் அத்தகையவை. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் சிறிது பயிற்சி இருந்தால் சரியான நேரத்தில் ஆசைகள் கழிந்து ஆன்மிகம் மிகும்.

வயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14)


ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: - தன் தலைமுடியை சடையாக மாற்றி ஒருவர் தலை மேல் கட்டியிருக்கிறார்; இன்னொருவரோ தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்.

காஷாயாம்பர - இன்னொருவரோ காவியுடையை அணிந்து கொண்டிருக்கிறார்.

பஹுக்ருத வேஷ: - இப்படி பலவித வேடங்கள் அணிந்து கொண்டு எல்லாம் துறந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ - அந்த மூடர்கள் எல்லாம் காணக் கண்ணிருந்தும் (அறிவிருந்தும்) உண்மையைக் காணாதவர்கள்

ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: - உறுதியாக இந்த எல்லாவிதமான வேடங்களும் வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் தான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

என்னும் திருக்கிறளின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறது.

Sunday, June 8, 2008

ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...




கல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.

சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

Saturday, June 7, 2008

பவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)


கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

கா தே காந்தா தன கத சிந்தா - மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்?

வாதுல கிம் - மூடனே ஏன் இந்த நிலை உனக்கு?

தவ நாஸ்தி நிவந்தா - உனக்கு இவை நல்ல கதி இல்லை.

த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா - மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே

பவ ஆர்னவ தரனே நௌகா பவதி - பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

காலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12)


தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

தின யாமின்யௌ - பகலும் இரவும்

சாயம் ப்ராத: - மாலையும் காலையும்

சிஷிர வஸந்தௌ - வாடையும் கோடையும்

புனர் ஆயாத: - மீண்டும் மீண்டும் வருகின்றன.

கால: க்ரீடதி - காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.

கச்சதி ஆயு: - வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.

தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு: - ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 6, 2008

செல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்ன ஆகும்? (பஜகோவிந்தம் 11)


மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

மா குரு தன ஜன யௌவன கர்வம் - செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.

ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் - காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.

மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா - இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு

ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா - இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 5, 2008

நீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால் பரிவாரம் இல்லை (பஜகோவிந்தம் 10)


வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

வயஸி கதே க: காம விகார: - இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?

சுஸ்கே நீரே க: காசார: - நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்?

க்ஷீணே வித்தே க: பரிவார: - செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்?

ஞாதே தத்வே க: சம்ஸார: - உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 4, 2008

சத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9)


ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் - அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் - பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.

நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் - மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.

நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

மனைவியும் மக்களும் யாவர்? (பஜகோவிந்தம் 8)


கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

கா தே காந்தா - யார் உனது துணைவி?

கஸ்தே புத்ர: - யார் உனது புதல்வன்?

சம்சார இயம் அதீவா விசித்ர: - இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது

கஸ்ய த்வம் - நீ யாருக்கு உரியவன்?

க: - நீ யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தாய்?

தத்வம் சிந்தய தத் இஹ ப்ராத: - அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Monday, June 2, 2008

கணேச ருணஹர ஸ்தோத்ரம்



குமரன் இந்த வலைப்பூவில் எழுத அழைத்த போது ஏதோ ஒரு உத்வேகத்தில் மாதம் இரண்டு இடுகைகள் இடுவதாக சொல்லிவிட்டேன். சாட் முடிந்த பிறகுதான் உணர்ந்தேன் அது எவ்வளவு கடினமென்று. ஆனாலும் முயற்சிப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. குருவருளையும், பராசக்தியையும் துணை கொண்டு இந்த முதல் இடுகையினை இடுகிறேன். கணேச ருணஹர ஸ்தோத்ரம். இதனை முன்பே என் மதுரையம்பதி பதிவில் இட்டிருக்கிறேன்.

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)

பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.

த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)

திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)

ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)

மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)

தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)

தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.