Wednesday, April 2, 2008

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே


suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyAyEth sarva viknObha saanthayE

கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. பொதுவாக இந்தச் சுலோகம் விநாயகரை வணங்கும் சுலோகமாகக் கருதப்படுகின்றது.

சுக்லாம் பரதரம் என்று இந்த சுலோகத்தின் தொடக்கத்தில் இருக்கும் சொற்றொடரை இரு சொற்களாகப் பிரித்து உச்சரிப்பது பொருளினை உணர்வதற்குத் தடையாக அமைகிறதோ என்றொரு எண்ணம் உண்டு. சுக்ல அம்பர தரம் என்ற மூன்று சொற்களின் கூட்டுச் சொல் சுக்லாம்பரதரம் என்பது. சுக்லாம் என்பதற்கும் பரதரம் என்பதற்கும் இடையில் இடைவெளி விடாமல் பலுக்கினால் (உச்சரித்தால்) பொருள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சுலோகம் விஷ்ணுவிற்கான சுலோகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஷ்ணும் என்றும் ப்ரசன்ன வதனம் என்றும் இருப்பதால் யானை முகனான கணேசனுக்கு உரிய சுலோகம் இல்லை இது என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இந்த சுலோகத்தில் எப்படி கணேசனுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதே போல் விஷ்ணுவிற்கும் பொருந்தாதது என்று சொல்லத் தக்க சில சொற்களும் இருக்கின்றன. இங்கே இந்த சுலோகத்திற்கு இரண்டு வகையிலும் பொருள் தருகிறேன். எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகர்:



சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

விஷ்ணு:


சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா! ஆரம்பமே இப்படியா? :)

குமரன் (Kumaran) said...

:-)

வாங்க மௌலி. இது தொடக்கம் இல்லையே. இதுக்கு முன்னாடி இன்னொரு விநாயகர் சுலோகம் போட்டாச்சே. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரனா word verificationm எல்லாம் வைப்பது? வாட் இஸ் திஸ்! கொஞ்ச நாள் நான் ஊர்ல இல்லீன்னா இப்படி எல்லாமா செய்வது? :-))

குமரன் (Kumaran) said...

கவனிக்கலை இரவிசங்கர். மன்னிச்சுக்கோங்க. இப்ப எடுத்துட்டேன். :-)

jeevagv said...

பீதாம்பரம் - இதற்கு பொன்னாடை என்றே இதுவரை பொருள் கொண்டு வந்திருக்கிறேன் குமரன் - அதுதான் மஞ்சள் நிற ஆடையோ?

ஒளிநிறம் உடையான் நிறைவெளி நிறைத்தவன்
ஒளிமதி நிறத்தவன் நான்கு கரத்தினன்
அழகன் கணபதி தாள்தனை துதித்திட
இடர்கள் எல்லாம் தகர்ந்திடுமே.

குமரன் (Kumaran) said...

பொன்னாடை என்று சொன்னாலும் சரியே ஜீவா. பீதாம்பரம் என்பது பொருள் அளவில் மஞ்சள் ஆடையைக் குறித்தாலும் வழக்கத்தில் மஞ்சள் நிறப் பட்டாடையைத் தான் குறிக்கிறது; அந்த பட்டாடையை பொன்னாடை என்றும் சொல்லலாம்.

இந்த சுலோகத்திற்கு நல்லதொரு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. நன்றிகள்.

cheena (சீனா) said...

நன்றி குமரன் - ஐங்கரனைப் பற்றிய அருமையான சுக்லாம்பரதம் வட மொழி ஸ்லோகம்

பலுக்கல்கள் = உச்சரிப்புகள்

இது எம்மொழிச் சொல்லோ ?

குமரன் (Kumaran) said...

நன்றி சீனா ஐயா. இது நாள் வரை உச்சரிப்பு என்பது வடமொழி என்றும் பலுக்கல் என்பது அதற்கேற்ற தமிழ்ச்சொல் என்று எண்ணிப் புழங்கிவந்தேன். நீங்கள் கேட்ட பின்னர் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று இராம.கி. ஐயாவின் வளவில் தேடியதில் இரண்டுமே தமிழ்ச்சொற்கள் என்று காட்டியிருக்கிறார். பலுக்கல் என்பது Spelling என்றும் உச்சரிப்பு என்பது Pronounciation/vocalization என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இனி மேல் நான் இரண்டு சொற்களையும் தகுந்த இடங்களில் புழங்குகிறேன்.