Friday, April 25, 2008

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2)


மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

மூட - ஏ மூடனே

ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் - அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு

வித்ருஷ்ணாம் மனஸி ஸத் புத்திம் குரு - சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.

யத் லபஸே நிஜ கர்ம உபாத்தம் வித்தம் - நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான்.

தேன வினோதய சித்தம் - அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

25 ஏப்ரல் 2008 அன்று சேர்த்த பகுதி:

பஜகோவிந்தம் பாடல்கள் எல்லாம் இல்லறத்தாரை விட துறவறத்தாருக்கே இன்னும் ஏற்றது என்பதோர் கருத்து எனக்கும் உண்டு. பல பாடல்களில் தெளிவாக அந்த அறிவுரை துறவிகளுக்கே என்று தெரியும். இந்தப் பாடலில் கருத்தோ எல்லோருக்கும் உரியதாகத் தெரிகிறது.

இந்தப் பாடலில் எடுத்தவுடனேயே மூடனே என்று தான் தொடங்குகிறார். அழியாத செல்வத்தை அடைய நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்க அழியும் செல்வத்தில் மனத்தைச் செலுத்துகிறாயே என்று கேட்கிறார். செய்யும் செயல்களுக்கு ஏற்ப பயன் கிடைக்கும். இங்கே கர்ம என்ற சொல்லுக்கு செயல்கள் என்றும் பொருள் கொள்ளலாம்; வினைப்பயன்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு வகையிலும் கிடைக்க வேண்டிய செல்வம் கிடைத்தே தீரும். கிடைப்பதை வைத்து மனத்தைத் திருப்தி படுத்திக் கொண்டு நிலையான செல்வத்தை அடைவதில் மனத்தைச் செலுத்து என்று சொல்கிறார் இந்த சுலோகத்தில்.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையின் முதல் பகுதி 'பஜ கோவிந்தம்' பதிவில் 17 அக்டோபர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

5 comments:

சிவா said...
//**ஏ மூடனே **// எப்படியோ பாட்டு போட்டாவது எங்களை திட்டிக்கறீங்க. பாட்டோட பொருள் நல்லாயிருக்கு. சன்னியாசியா போக சொல்லறீங்களா :-)

October 18, 2005 8:49 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா, இந்த பாட்டு ஏன் உங்களை மட்டும் திட்டறதா எடுத்துக்கிறீங்க..எல்லாரையும் சொல்றதா எடுத்துக்கலாமே.

இந்த பஜ கோவிந்தம் பாட்டுகள் முக்கியமா சந்நியாசிகளுக்கு ஆன பாட்டுகள் தான். ஆனா இதுல சம்சாரிகளான நமக்கும் விஷயம் இருக்கு.

இந்த பாட்டு பேராசை கொண்டு பணம் சம்பாதிப்பதே குறிக்கோளா இருக்காதேன்னு சொல்லுது. எது கிடைச்சுதோ அது நம்ம தலைவிதியையும் முயற்சியையும் பொறுத்து கிடைக்குது. அதைக் கொண்டு திருப்தி அடை. பேராசை கொண்டு கெட்ட வழிகளில் போகாதே. நல்ல விஷயங்களைப் பத்தி சிந்தனை செய். - இதுல எங்கே சந்நியாசியா போன்னு சொல்லியிருக்கு?

October 18, 2005 9:12 PM
--

சிவா said...
உங்கள் விளக்கத்துக்கு நன்றி குமரன். சூப்பர் ஸ்பீடா இருக்கீங்க. :-)

October 18, 2005 9:28 PM
--

பொன்ஸ்~~Poorna said...
வித்ருஷ்ணாம் என்றால் நினை என்று பொருள் கொள்ளவேண்டுமா?

April 26, 2006 10:45 PM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ், வித்ருஷ்ணாம் என்றா ஆசையற்று என்று பொருள் கொள்ளலாம்.

April 30, 2006 10:02 AM

கிருத்திகா ஸ்ரீதர் said...

இல்லறத்தார் துறவறத்தார் என்று பிரித்துக்காண்பதை விட இறைவனிட சேர எண்ணும் அனைவர்க்கும் பொது என்றும் கொள்ளலாமல்லவா....

குமரன் (Kumaran) said...

அதில் எந்த ஐயமும் இல்லை கிருத்திகா. இறைவனை அடைதல்/ தன்னை உணருதல் என்று நாம் எப்படிச் சொன்னாலும் ஆன்மிகத் தேடல் இருக்கும் எல்லோருக்கும் உரியன தான் இந்த அறிவுரைகள். ஆனால் பஜ கோவிந்தத்தின் சில செய்யுள்களில் தரப்பட்டிருக்கும் அறிவுரைகள் இல்லறத்தாரால் ஏற்று நடப்பது என்பது சங்கடமாக இருக்கும். அந்த வகையில் அவை துறவறத்தாருக்கே சொல்லப்பட்டவை என்று எடுத்துக் கொள்ளலாம்.

Sridhar V said...

குமரன்,

அருமையான பாடலும் விளக்கமும். 'டுக்கருஞ்சரணே' (பாடல் 1) என்ற பதத்திற்க்கு மதுமிதாவின் விளக்கம் அருமை. ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன்.

இதே போல் சங்கரரின் 'தச ஸ்லோகம்' பனுவலும் அர்த்தத்தோடு கற்றுக் கொள்ள ஆவல்.

எல்லா பாடலையும் சேர்த்து ஒரு பதிவாக / PDF கோப்பாக இட இயலுமா?

குமரன் (Kumaran) said...

நீங்கள் தேடியது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ஸ்ரீதர் நாராயணன். சங்கரரின் தச ஸ்லோகத்தைப் படித்ததாக நினைவில்லை. ஏதேனும் சுட்டி இருந்தால் தாருங்கள். படித்துப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் இட்ட பின்னர் முடிந்தால் ஒரே பதிவாக இடுகிறேன்.