Friday, April 11, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 1


உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை சேரலமாம் கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான வடமொழிப் பனுவல் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. அடியேன் தினந்தோறும் காலையில் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரம் இது. (இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லாவிட்டாலும் நினைவிற்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்). ஒன்பது முறை தொடர்ந்து சொல்லி நினைத்த காரியங்களில் வெற்றி பெற்றதும் உண்டு.

பகலவன் இராசிச் சக்கரத்தின் கடைசி இராசியான மீனராசியிலிருந்து (பங்குனி) முதல் இராசியான மேஷராசிக்குச் (சித்திரை) செல்லும் இந்த நேரத்தில், இராமபிரானின் திருவவதார நன்னாள் வருகின்ற இந்த நேரத்தில் இருவர் தொடர்பும் உடைய இந்த வடமொழிப் பனுவலைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடுகை தொடங்கி இனி வரும் இடுகைகளில் சூரிய தேவனை முழுமுதற்கடவுளாகப் போற்றும் இந்தப் பனுவலைப் பொருளுடன் பார்ப்போம்.

இராம இராவண யுத்தத்தின் தொடக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இது. முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1

tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1


ததோ - அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் - போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் - போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா - முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் - போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா - இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்

போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.

தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2

daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2

த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் - போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச - தேவர்களுடனே
சம ஆகம்ய - வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: - ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்

தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3

rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3


ராம ராம மஹாபாஹோ - பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் - எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி - போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் - காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் - (அந்த) இரகசியத்தை
ச்ருணு - கேள்
வத்ஸ - குழந்தாய்

தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4

Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4


ஆதித்ய ஹ்ருதயம் - (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் - எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் - வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது

புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5

sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5


ஸர்வ மங்கள் மாங்கல்யம் - மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் - எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் - கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் - வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் - சிறந்தது

இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.

அடுத்த சுலோகத்திலிருந்து சூரியனைப் போற்றத் தொடங்குகிறார்.

19 comments:

Geetha Sambasivam said...

அருமையான பதிவு குமரன், காலையில் வேறே இதைப் படிக்க நேர்ந்தது. நல்லா யோசிச்சுத் தேர்ந்தெடுக்கிறீர்கள். வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

சூரிய உதயத்தில் இதைப் படிக்கும்படி நேர்ந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

சிவமுருகன் said...

அருமையண்ணா,

குளிப்பதற்க்கு முன்னர் ஆதித்ய ஹிருதயம் சொல்வது வழக்கம். வேகமா 2-3 நிமிடத்தில் சொல்லி முடித்து விடுவேன் ஆனா பாருங்க அந்த ஒவ்வொரு பதத்தில் ஒரு பெரிய கருத்து இருக்கும். அதை வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

நல்ல நோக்கம். சுலபமாகப் புரிகிறமாதிரியான விளக்கங்களுக்கு பாராட்டுகள். தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

குமரன் (Kumaran) said...

கதிரவன் குணதிசையில் தோன்றும் போது இந்த துதியைச் சொல்வது தானே முறை கீதாம்மா. உங்களுக்கு அப்படி அமைந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்.

தினந்தோறும் சொல்லிக் கொண்டிருந்தேன் என்று சொன்னேனல்லவா? நானும் குளிப்பதற்கு முன்னர் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். :-) பல் விளக்கும் போது வேறு சிந்தனைகளில் மனம் பாயும் போது ஆதித்ய ஹ்ருதயம் சொல்லத் தொடங்குவேன். மனம் நிலை பெறும். நல்லதொரு தியானம் செய்தது போல் இருக்கும்.

பயன் எதிர்பார்த்து ஒன்பது முறை ஓதும் போது மட்டும் குளித்து முடித்துவிட்டு இறைவன் திருமுன்னர் சொல்லுவேன். அப்போது மட்டும் அவ்வளவு முனைப்பு பாருங்கள். எல்லாம் சுயநலம் தான். :-)

இரண்டு மூன்று நிமிடங்களில் சொல்லி முடித்துவிடலாம் தான். நான் பல் விளக்கும் போது சொல்லத் தொடங்கி சில நேரம் குளிக்கும் போதும் தொடரும். :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஜீவி ஐயா.

குமரன் (Kumaran) said...

பதிவில் எழுத வந்த போது தமிழ்ப்பனுவல்களில் அபிராமி அந்தாதி, திருப்பாவை, திருவாசகம் வடமொழியிப்பனுவல்களில் பஜகோவிந்தம், ஆதித்யஹ்ருதயம் இவற்றிற்குப் பொருள் எழுத வேண்டும் என்று ஆவலுடன் வந்தேன். பஜகோவிந்தம் நிறைவு பெற்று நெடுநாள் ஆகிவிட்டது. அபிராமி அந்தாதி இன்னும் சில நாட்களில் நிறைவு பெற்றுவிடும். அடுத்து தொடர்ந்து திருப்பாவை, திருவாசகம், ஆதித்ய ஹ்ருதயம் எழுதி வர வேண்டியது தான். இறையருள் முன்னிற்கட்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆதித்ய இருதயம் நல்ல முயற்சி. இதில் வரும்"யே சப்தேஷு ஜாகர்தி" என்ற வாக்கியம் தான் எங்கள் ICAI(Chartered Accountant) யின் மோட்டோவாக விளங்குகிறது." அனைவரும் தூங்கும்போது நான் விழித்துக்கொண்டு இருக்கிறேன் என்பது இதன் அர்த்தம். இதன் பொருளை எனக்கு பரமாச்சார்யர் விளக்கிய விதத்தை ஆச்சார்ய இருதயத்தில் போடுகிறேன்.குமரனின் மொழி விரோதமில்லாத தனித்தன்மைக்கு வணக்கம்

கபீரன்பன் said...

நல்ல துவக்கம்.யாவரும் அறிய வேண்டிய அவசியமான விஷயம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

வடமொழியை தமிழில் எழுதி படிக்கும் போது உச்சரிப்பில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக வடமொழியை பற்றி ஏதும்
அறியாதவர்களுக்கு இது மிக சிரமமான விஷயம். ஆகையால் ஆதித்ய ஹ்ருதயத்தை முறையான உச்சரிப்புடன் கூடிய ஒலிப்பதிவை
கேட்டுக்கொண்டே படித்தால் இந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதற்கான இணைப்பு இதோ. வேண்டுவோர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வலைப்பூவில் மீயுரை பதிந்து அங்கிருந்தே கேட்கச் செய்யலாம். குரல்:சுந்தர் கிடாம்பி. ப்ரபத்தி டாட் காம் என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது. யாவரும் கேட்டு பயனடைய விழைகிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஆதித்யஹ்ருதயம் கேட்டுத்தொடங்கும் நாட்களில் இருக்கும் உற்சாகமும் அமைதியும் தனிதான். அர்த்தங்கள் புரியாதபோதும் அந்தந்த த்வனி தரும் அதிர்வுகள் வீட்டில் நிறையும் போது காலை வேளையில் வீடே தங்க நிற கிரணங்களால் ஜொலிப்பது போல் தோன்றும். இத்தகைய ஸ்லோகத்தை விளக்கங்களோடு புரிந்து கேட்பது எத்தனை சுகம். நன்றி...

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் கபீரன்பன்.

உண்மை. வடமொழியைத் தமிழில் எழுதும் போது பலுக்கல் குறைகள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய உண்டு. லிப்கோ பதிப்புகளில் தமிழில் தான் வடமொழிப்பனுவல்களைப் படித்தேன். அதனால் சில இடங்களில் பலுக்கல் குறைகள் இருப்பதைப் பின்னர் கண்டிருக்கிறேன். பொருள் தெரியத் தெரிய குறைகள் நீங்கத் தொடங்கின.

யூட்யூபில் ப்ரபத்தி.காமில் தளத்திலிருந்து குரலை மட்டும் எடுத்து இட்டிருந்தார்கள். அதனை சேமித்து வைத்திருக்கிறேன். ஆதித்ய ஹ்ருதயம் முழுமையும் சொல்லி முடித்தபின்னர் அதனை தனி இடுகையாக இடலாம் என்று நினைத்திருக்கிறேன். இங்கே பின்னூட்டத்தில் இணைப்பைத் தந்ததற்கு நன்றிகள். இப்போதே கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

வாங்க கிருத்திகா. சூலமங்கலம் சகோதரிகள் ஆதித்ய ஹ்ருதயம் பாடியிருக்கிறார்களா? சுட்டியிருந்தால் தாருங்கள்.

தொடர்ந்து வந்து படித்துத் தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

திராச. யே சுப்தேஷு ஜாகர்தி என்ற சொற்றொடர் பொருத்தமானது தான். :-)

நீங்கள் எழுதியதைப் படித்த போது கீதையில் கண்ணன் சொல்வதும் நினைவிற்கு வந்தது. மற்றவர்களுக்கு இரவாக இருப்பது யோகிக்கு/ஞானிக்குப் பகலாக இருக்கும். மற்றவர்களுக்குப் பகலாக இருப்பது யோகிக்கு/ஞானிக்கு இரவாக இருக்கும். அது போலத் தானே இங்கே உலகமெல்லாம் உறங்கும் போது பகலவன் உறங்காமல் ஜீவனாக இருக்கின்றான் என்பதுவும். :-)

பரமாச்சார்யர் இந்தச் சொற்றொடருக்குச் சொன்ன விளக்கத்தை அறிய மிக்க ஆவலாக இருக்கிறேன் திராச.

எனக்கு மொழி விரோதமில்லை திராச. செந்தமிழும் ஆரியமும் எனக்கு இரண்டு கண்கள் என்று தமிழ்மண விண்மீன் வாரத்தில் நான் சொன்னது நினைவில் இருக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..ப்ரமாதம்! நான் கூட ஒன்று எழுதியிருக்கிறேன்..டைம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்...

குமரன் (Kumaran) said...

இராமமூர்த்தி ஐயா.

நன்றி. தங்கள் இடுகையின் சுட்டியைத் தாருங்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதோ..இது தான் என் சுட்டி! தங்கள் விமர்சனம் எதிர்பார்க்கலாம் அல்லவா?
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2012/01/blog-post_14.html

Muthu said...

ஆதித்ய இருதயத்தில் இருப்பவர் சங்கரனே என்பது தெளிவானது