பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ
கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
***
முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.
கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.
ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.