Tuesday, September 21, 2010

இராமாயணம் ஒரே சுலோகத்தில்...


கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரே சுலோகத்தில் அமைந்த பாகவதத்தைப் பார்த்தோம் சென்ற இடுகையில். இந்த இடுகையில் ஒரே சுலோகத்தில் அமைந்த இராமாயணத்தைப் பார்க்கப் போகிறோம்.

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!


இராமனைப் பணி மனமே!

Wednesday, September 1, 2010

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்

இன்று கண்ணனின் பிறந்த நாள்! கோகுலாஷ்டமி! கிருஷ்ண ஜெயந்தி! ஜன்மாஷ்டமி! கண்ணனின் லீலைகளைக் கூறும் புராணம் பாகவத புராணம்! வேதங்கள் அனைத்தையும் நான்காகப் பகுத்த பின்னரும், அவற்றின் உட்பொருளை சூத்திர வடிவில் பிரம்ம சூத்திரமாக எழுதிய பின்னரும், உபவேதமான ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை எழுதிய பின்னரும் முழு மன நிறைவும் பெறாத வியாஸ பகவான் நாரத மகரிஷியின் அறிவுரைக்கிணங்க இயற்றியதே கிருஷ்ண லீலாம்ருதமாகிய ச்ரிமத் பாகவதம்!

பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இருக்கிறது. அது தான் இது!

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம்


ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம் - முன்னொரு காலத்தில் தேவகி தேவியின் திருக்கர்ப்பத்தில் உதித்தான்!

கோபீ க்ருஹே வர்த்தனம் - யசோதா பிராட்டியாகிய கோபியின் வீட்டில் வளர்ந்தான்!

மாயா பூதன ஜீவிதாபஹரணம் - மாயையுடன் வந்த பூதனையின் உயிரைக் கவர்ந்தான்!

கோவர்த்தனோத்தாரணம் - கோவர்த்தன மலையைத் தூக்கினான்!

கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம் - கம்சனை அழித்து கௌரவர் முதலானவர்களை ஒழித்தான்!

குந்தீ ஸுதா பாலனம் - குந்தியின் மைந்தர்களான பாண்டவர்களைக் காத்தான்!

ஏதத் பாகவதம் புராண கதிதம் - இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்!

ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம் - ச்ரி கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்!

குணானுபவத்தில் ஈடுபடும் அடியார்கள் எண்ணி எண்ணி இன்புறத் தக்க வகையில் கண்ணனின் லீலைகளைக் கூறும் வரிகள் ஒவ்வொரு வரியும்! கூடியிருந்து குளிர வேண்டும்!

Saturday, July 17, 2010

சரஸ்வதி நமஸ்துப்யம்...


சிறு குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் சுலோகங்களில் சுக்லாம்பரதரம் சுலோகத்திற்கு அடுத்த சுலோகம் இது தான் என்று நினைக்கிறேன். அந்த வயதில் படிப்பு தானே மிக முக்கியம். அதனால் கலைவாணியை வேண்டும் இந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

ரொம்ப எளிமையான சுலோகம். ஒவ்வொரு சொல்லாகப் படித்துக் கொண்டு வந்தாலே பொருள் புரிந்துவிடும்.

சரஸ்வதி - தேவி சரஸ்வதி!

நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.

வரதே - வரம் தருபவளே!

காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!

வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை

கரிஷ்யாமி - செய்கிறேன்

சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

வேண்டுபவற்றை எல்லாம் தரும் வரமான கல்வியைத் தொடங்கும் போது அது நன்கு சித்தியாக அன்னை சரஸ்வதியை வேண்டுவது தானே முறை!

Friday, July 2, 2010

கற்பூரம் போன்ற நிறத்தை உடையவன்!


கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சஹிதம் நமாமி!


இன்று தான் முதன்முதலாக இந்த சுலோகத்தைப் படித்தேன். மிகவும் எளிமையான சுலோகம். அற்புதமாக இருக்கிறது.

கற்பூர கௌரம் - கற்பூரம் போன்ற நீறு பூத்த வெண்மையான நிறத்தை உடையவன்!

கருண அவதாரம் - கருணையே வடிவெடுத்தவன்

சம்சார சாரம் - இந்த உலகங்களுக்கெல்லாம் அடிப்படையானவன்

புஜகேந்த்ர ஹாரம் - பாம்புகளின் தலைவனை மாலையாக அணிந்தவன்

சதா வஸந்தம் ஹ்ருதய அரவிந்தே - மனத்தாமரையில் என்றும் வசிப்பவன்

பவம் - உலகம், உயிர் அனைத்திற்கும் காரணன்

பவானி சஹிதம் - என்றும் அம்பிகையைப் பிரியாதவன்

நமாமி - வணங்குகிறேன்.

கற்பூரத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலகங்களுக்கெல்லாம் சாரமானவனை, பாம்பரசனை அணிந்தவனை, மனத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களுக்கெல்லாம் காரணனை, அம்பிகை நாதனை அடியேன் வணங்குகிறேன்!

ஓம் நம:சிவாய!

Saturday, June 26, 2010

விளாம்பழமும் நாவற்பழமும்...





கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்


இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். இன்று பொருள் எழுதலாம் என்று உட்கார்ந்தால் கபித்த என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே இணைய சமஸ்கிருத அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. உடனே கூகிளாண்டவரிடம் அதன் படத்தைக் காட்டு என்று கேட்டால் விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.

மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.

கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்

பூத
கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.

கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.

உமா சுதம் - உமையின் மகன்.

சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.

விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.

பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!

இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!

Thursday, June 17, 2010

கந்தனுக்கு மூத்தவன் கணேசன்!



ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


ஐந்து கரத்தானின் பதினாறு திருநாமங்களைக் கூறும் சுலோகம் இது. இதனை நாமாவளியாகச் சொல்லும் போது

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:


என்று சொல்லிப் போற்றுவோம்.

சுலோகத்தைப் பொருளுக்காகப் பிரித்தால்

ஸுமுக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


என்று அமையும்.

ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - பிரபஞ்ச சக்திகளின் முதல்வன் (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்

இப்பதினாறு திருநாமங்களைச் சொல்லி வணங்க ஆனைமுகன் பிரசன்ன வதனனாய் மிக்க மகிழ்ந்து அருள் புரிவான்!

***

இந்த எழுத்துப்பதிவை ஒலிப்பதிவாக்கித் தந்த சுப்புரத்தினம் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Monday, June 14, 2010

அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
- இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!