Monday, June 14, 2010

அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
- இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!

Sunday, March 28, 2010

அகஜானன பத்மார்கம் கஜானனமஹர்நிசம்...


அகஜானன பத்மார்கம் கஜானனமஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

விநாயகர் மேலான இந்த சுலோகத்தை நாம் நிறைய இடத்தில் படித்திருக்கிறோம்; சொல்லியிருக்கிறோம். இன்றைக்கு இந்தச் சுலோகத்தின் பொருளைப் பார்ப்போம்.

அகஜ ஆனன பத்ம ஆர்கம் கஜ ஆனனம் அஹர் நிசம்
அநேக தம் தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே


அகஜ - அக = மலை; அகஜ = மலைமகள்; பர்வத புத்திரி; பார்வதி.

ஆனன - திருமுகம்

பத்ம - தாமரை

ஆர்கம் - பகலவன்; சூரியன்

அகஜானன பத்மார்கம் - பார்வதியின் திருமுகம் என்னும் தாமரையை மலர்விக்கும் பகலவனைப் போன்றவன் அவள் திருமகன்!

கஜ ஆனனம் = யானைமுகத்தவன்!

அஹர் நிசம் = அஞ்ஞான இருளை நீக்கும் பகலைப் போன்றவன்; அஹ: = பகல்; நிசம் = இரவு!

பக்தானாம் = அடியவர்களுக்கு, அநேக = மிகுதியான; தம் (dham) = வரங்களை; தம் (tham) = அருளுபவன்.

ஏகதந்தம் = ஒற்றைக்கொம்பன்

உபாஸ்மஹே = நான் வணங்குகிறேன்.

Saturday, January 23, 2010

நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!



ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


எனக்கு என் தந்தையோ தாயோ உறவினர்களோ நண்பர்களோ மகன்களோ மகள்களோ பணியாட்களோ கணவனோ மனைவியோ கல்வியோ தொழிலோ எதுவுமே அடைக்கலம்/கதி இல்லை. நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

பெரும் துன்பத்தைத் தரும் இந்த பிறப்பிறப்புக் கடலில் நான் இருக்கிறேன். இத்துன்பத்தைக் கண்டு பெரும் பயம் கொள்கிறேன். பாவத்தாலும் காமத்தாலும் கஞ்சத்தனத்தாலும் ஆசையாலும் எப்போதும் பீடிக்கப்பட்டு பிறப்பிறப்புக் கட்டினால் கட்டப்பட்டு பயனில்லா வாழ்கை வாழ்கிறேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

தானம் தருவதை அறியேன்; தியான யோகம் அறியேன்; துதிகள் மந்திரங்கள் தந்திரங்கள் அறியேன்; பூஜை செய்யும் முறைகளும் அறியேன்; அனைத்தையும் துறக்கும் யோகமும் அறியேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!

புண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் தீய செயல்களைச் செய்பவன்; தீய உறவுகளை உடையவன்; தீய எண்ணங்களை உடையவன்; தீயவர்களிடம் பணி செய்பவன்; நன்னடத்தை இல்லாதவன்; தீய நடத்தை உடையவன்; தீய பார்வை கொண்டவன்; தீய சொற்களின் குவியல்களைக் கொண்டவன்; எப்போதும்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

மக்களின் தலைவனையோ, மகாலக்ஷ்மி தலைவனையோ, மகேசனையோ, தேவர் தலைவனையோ, நாளின் தலைவனையோ, இரவின் தலைவனையோ மற்ற எந்தத் தலைவனையும் நான் அறியேன்! எப்போதும்! கதியானவளே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

விவாதங்களிலும், கவலையிலும், விபத்துகளிலும், தூர தேசங்களிலும், நீரிலும், நெருப்பிலும், மலையிலும், எதிரிகள் நடுவிலும், காட்டிலும், கதியானவளே, எப்போதும் என்னை நன்கு காத்தருள்வாய்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் அனாதை! நான் ஏழை! முதுமையும் நோயும் கொண்டவன்! நான் மிகவும் களைத்தவன்! நான் மிகவும் வருந்தத்தகுந்தவன்! எப்போதும் பிரச்சனைகளால் விழுங்கப்படுபவன்! எப்போதும் விபத்துகளால் நஷ்டமடைபவன்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!




Wednesday, May 6, 2009

நீர் மோரை விற்பதா? கோவிந்தனை விற்பதா?


'என்ன இது வாசலில் யாரோ இனிய குரலில் கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கூவிக் கொண்டே செல்கிறார்களே'

"அடியே தயிர்க்காரி. தயிர்க்கலயத்தைத் தலையில் தாங்கிக் கொண்டு செல்கிறாய். ஆனால் தயிர் தயிர் என்று கூவாமல் வேறு ஏதோ பெயர் சொல்லிக் கூவுகிறாயே?"

'என்ன இது? இவள் ஒன்றும் விடை சொல்ல மாட்டேன் என்கிறாளே. இந்தப் பெண்களே இப்படித் தான். நம் அகமுடையாளும் சில நேரம் இப்படித் தான் இந்தப் பெயர்களைக் கூவிக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் ஒளபாசனத்திற்குத் (இல்லறத்தார் செய்யவேண்டிய தினசரி தீ வழிபாடு) தேவையான பொருட்களை எடுத்து வைக்காமல் இவளும் கோவிந்த தாமோதர மாதவா என்று புலம்பத் தொடங்கிவிடுகிறாள். உலகத்தில் எல்லா பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டது போலும்'

இப்படி எண்ணிக் கொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கண்ணனின் பாதக்கமலங்களில் பறி கொடுக்கப்பட்ட மனத்துடன் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று கூவிக் கொண்டு நீர் மோர் விற்றுச் செல்லும் இடைப்பெண்ணைப் பார்த்துக் கொண்டே இல்லத்தினுள் செல்கிறார் அந்த வீட்டுக்கு உரியவர்.

***

விக்ரேது காமாகில கோப கன்யா
முராரி பதார்பித சித்த வ்ருத்தி
தத்யோதகம் மோஹவசாத் அவோசாத்
கோவிந்த தாமோதர மாதவேதி


ஒரு கோபகன்னிகை தன்னுடைய மனம், மெய், மொழி என்ற அனைத்தும் கண்ணனின் பாதக்கமலத்தில் அடைக்கலமாகக் கொடுத்து அந்த இன்பம் தந்த மயக்கத்தில் தன் தலையில் நீர்மோரைத் தாங்கிச் சென்றாலும் 'கோவிந்த தாமோதர மாதவா' என்று கூவிச் செல்கிறாள்.

Tuesday, April 14, 2009

ஆதித்ய ஹ்ருதயம் – 6




ஆதித்ய ஹ்ருதயத்தின் இறுதிப்பகுதி - 26 முதல் 31 வரையிலான சுலோகங்கள்:

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

PuujayasvainamEkaakrO dEvadEvam jagathpathim
yEthath thrikuNitham japthvaa yuththEshu vijayishyasi



தேவதேவம் - தேவர்களுக்கும் தெய்வமானவனை

ஜகத்பதிம் - உலகத்தை உடையவனை

பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ - ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.

ஏதத் - இந்த ஸ்தோத்திரத்தை

த்ரிகுணிதம் ஜப்த்வா - மும்முறை ஜபித்து

யுத்தேஷு - போரில்

விஜயிஷ்யஸி - வெற்றி பெறுவாய்

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

asminkshanE mahAbhAhO rAvanam thvam vadhishyasi
yEvam ukthvA thathAkaSthyO jakAma cha yathA gatham


அஸ்மின் க்ஷணே - இந்த நொடியிலேயே

மஹாபாஹோ
- பெரும் தோள்வலிமை உடையவனே

ராவணம் த்வம் வதிஷ்யஸி - இராவணனை நீ வதைப்பாய்

ஏவம் உக்த்வா - இப்படி சொல்லிவிட்டு

ததா அகஸ்த்யோ - அங்கிருந்த அகத்தியர்

ஜகாம ச யதா கதம் - எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்

yEthas sruthvA mahAthEjA nashta sOkO bhavath thadhA
dhArayamAsa suprIthO rAghava: prayathAthmavAn


ஏதச் ச்ருத்வா - இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)

மஹாதேஜா - பெரும் வலிமையுள்ளவனும்

தாரயாமாஸ - நோக்கத்தில் உறுதியுள்ளவனும்

சுப்ரீதோ - மிகவும் மகிழ்ந்தவனும்

ராகவ: ப்ரயதாத்மவாந் - முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்

நஷ்ட சோகோ பவத் ததா - அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்
த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்

Adityam prEkshya japthvA thu param harsam avApthavAn
thrirAsamya shuchir bhUthvA dhanur AthAya vIryavAn


த்ரிர் ஆசம்ய - மும்முறை ஆசமனீயம் செய்து



சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்



தநுர் ஆதாய - வில்லை ஏந்தியவன்



வீர்யவாந் - வீரத்தில் சிறந்தவன்



ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து - ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து



பரம் ஹர்சம் அவாப்தவாந் - மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

rAvanam prEkshya hrustAthmA yudhdhAya samupAgamath
sarva yathnEna mahataa vadhE thasya dhruthObhavath

ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் - போர் செய்யும் நோக்கத்துடன் வரும்


ராவணம் ப்ரேக்ஷ்ய - இராவணனைப் பார்த்து


ஸர்வ யத்னேன மஹதா - மேலான எல்லா முயற்சிகளுடனும்


வதே தஸ்ய த்ருதோபவத் - அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா
சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி

atha ravi ravadan nirIkshya rAmam
mudhithamanA paramam prahrishyamAna:
nishicharapatir samkshayam vidithvA
suragana madhyagatO vachastvarEti


அத - அப்போது


சுரகண மத்யகதோ - தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த



ரவி - சூரியன்


முதிதமநா - மிகவும் மகிழ்ந்த மனத்துடன்


பரமம் ப்ரஹ்ருஷ்யமான: - மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக



நிசிசரபதி - இரவில் திரிபவர்களான அரக்கர்களின் தலைவனான இராவணனின்


சம்க்ஷயம் விதித்வா - அழிவு நேரம் நெருங்கி விட்டதை அறிந்து



ரவதந் நிரீக்ஷ்ய ராமம் - 'விரைவில் நடத்துவாய் இராமா'


வசஸ்த்வரேதி - என்று சொன்னான்.

இதி ச்ரிமத் ராமாயணே வால்மீகியே ஆதிகாவ்யே ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

இத்துடன் ச்ரிமத் இராமாயணத்தில் வால்மீகி இயற்றிய முதல் காவியத்தில் இருக்கும் ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்தோத்திரம் நிறைவடைந்தது.

Friday, January 16, 2009

ஆதித்ய ஹ்ருதயம் - 5

ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள்:

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE
nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE


தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு

வஹ்னயே - தீ வடிவானவருக்கு

விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு

தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு

ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு

லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு

நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:
pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்

தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்

ப்ரபு: - இறைவன் இவனே

பாயதி ஏஷ - இவனே காக்கிறான்

தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்

வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்

கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்

இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:
yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ - இவனே

பூதேஷு - எல்லா உயிர்களிலும்

சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)

ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்

பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca
yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ - இவனே

வேதா: - வேதமாகவும்

க்ரத: - சடங்குகளாகவும்

க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்

ஏவ ச - இவனே இருக்கிறான்

லோகேஷு - இவ்வுலகத்தில்

யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ

சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே

ரவி: - ஒளி படைத்தவன்

ப்ரபு: - இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha
kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:


ராகவ: - இராகவா!

ஏனம் - இவன்

க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்

காந்தாரேஷு - காடுகளிலும்

பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்

கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை

கச்சின் - எப்போதும்

நாவஸீததி - கைவிடமாட்டான்.

Friday, December 5, 2008

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!

இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இந்தப் பாடலின் நடுவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருகிறது. அது சுவையான சுகமான மொழிபெயர்ப்பு. இருந்தாலும் சொல்லுக்குச் சொல் விளக்கம் இருந்தால் நல்லது என்று எண்ணி தமிழில் இங்கே மொழிபெயர்த்து இடுகிறேன்.

ஓம் ஓம் ஓம்

சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் - நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே - நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே - நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: - நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: - நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.



ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: - நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: - நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: - நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந மே த்வேஷ ராகௌ - எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ - எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: - எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: - நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: - நான் பொருளும் இல்லை

ந காம: - நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: - நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந புண்யம் ந பாபம் - நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் - நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் - நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: - நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா - நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ம்ருத்யுர் ந சங்கா - எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: - எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா - எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் - எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா - நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


அஹம் நிர்விகல்ப - நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: - உருவம் இல்லாதவன்

விபுத்வா ச - எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர - எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் - எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் - எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா - அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.